Poori Masala in Tamil | பூரி மசாலா | Potato Masala for Poori | பூரிக் கிழங்கு | Poori Masala

See this Recipe in English

பூரி மசாலா அல்லது பூரி கிழங்கு பூரியுடன் பரிமாறப்படும் ஒரு சுவையான உணவு வகை. இது வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தவிர சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். பூரி கிழங்கு தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான உணவு வகை. இது தவிர ஆந்திர மாநிலத்திலும் இது பிரபலம். அங்கு இது  பூரி கரி, ஆலு மசாலா போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. பூரி மசாலா செய்வது மிகவும் சுலபம், சுவையான பூரி மசாலா நீங்களும் சுலபமான முறையில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான பூரி மசாலா செய்ய சில குறிப்புகள்

  • பூரி கிழங்கு செய்வதற்கு  வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து கொள்ளலாம், உருளைக்கிழங்கு எல்லாருக்கும் ஏற்ற உணவல்ல, அதனால் விருப்பப்பட்டால் வெங்காயம் அதிக அளவிலும் உருளைக்கிழங்கை குறைவாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பூரி கிழங்கு செய்ய உருளைக்கிழங்குகளை வேக வைக்கும் பொழுது பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து வேக வைக்கலாம் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கலாம், ஆனால் மிகவும் மென்மையாக  வேக வைக்கக்கூடாது.
  • காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
  • இஞ்சி  மற்றும் பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • கடைசியாக 1 தேக்கரண்டி கடலை மாவை தண்ணீரில் சேர்த்துக் கலக்கலாம் அல்லது அதை செய்யாமலும் பூரிக் கிழங்கு செய்யலாம்.

இதர வகைகள் – சால்னாவெஜிடபிள் சால்னா, சால்னா, ஹோட்டல் ஸ்டைல் சால்னா, சோயா குருமா, வடைகறி,  கததிரிக்காய் கிரேவி,  பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, வெஜிடபிள் குருமா , சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா,  காளிஃபிளவர் பட்டாணி குருமா

அசைவ குருமா வகைகள் – முட்டை குழம்பு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா,  ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, சிக்கன் சால்னா, உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு,  இறால் தொக்கு.

 

See this Recipe in English

பூரி மசாலா செய்ய தேவையான பொருட்கள்

  • 3 உருளைக்கிழங்கு (வேக வைத்தது)
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 2 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 4 பச்சை மிளகாய்
  • சிறிய துண்டு இஞ்சி (பொடியாக நறுக்கியது)
  • 5 பூண்டுப் பற்கள் (பொடியாக நறுக்கியது)
  • 1 தேக்கரண்டி கடலை மாவு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

1. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதில் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளிக்கவும்.

2. அதனுடன் கறிவேப்பிலை அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

3. 2 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

4. நான்கு பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்துக்கொள்ளவும்.

5. 5 பல் பூண்டு பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. ஒரு சிறிய துண்டு பட்டையை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். 

7. இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

9. வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.

10. அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

11. அதில் 1-2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

12. பின்னர் மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி கையால் மசித்து விடவும்.

13. வேகவைத்த உருளைக் கிழங்குகளை வெங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.

14. வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மென்மையாக கிளறி 2-3நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

15. ஒரு சிறிய பாத்திரத்தில் 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து 4 முதல் 5 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

16. கரைத்து வைத்துள்ள கலவையை உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

17. ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

18. சுவையான பூரி மசாலா தயார், பூரியுடன் சேர்த்து பரிமாறவும். 

Leave a Reply